top of page

எது தர்மம்?

  • Writer: Anbezhil
    Anbezhil
  • Mar 1, 2021
  • 6 min read

Updated: Mar 2, 2021

தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது கவியரசர் கண்ணதாசன் சொன்னது. அந்தக் கண்ணனே தர்மத்தைப் பற்றி சொன்னது என்ன?

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத | அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் | தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (IV. 7-8)

எப்போதெல்லாம் தர்மத்துக்கு பங்கம் ஏற்பட்டு

அதர்மம் தலைதூக்கி வளர்கிறதோ அப்பொழுதெல்லாம் என்னையே பிறப்பித்துக் கொள்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

அடுத்ததாக எப்போதெல்லாம் தர்மம் மிகவும் குலைகிறதோ, எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ, சாதுக்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்களோ நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் என்கிறார்.

தர்மம் நம்மை காக்கும், தர்மம் நலிவடையும்போது கண்ணன் நம்மைக் காக்க வருவார். இவை தெரிகிறது. ஆனால் தர்மம் என்பது என்ன?


சமஸ்கிரதத்தில் உள்ள தர்மம் என்பதன் வேர்ச்சொல் ‘’த்ரு’’. அதன் பொருள் ‘’தாங்குதல்’’, ஆதாராமாக இருத்தல். தர்மம் என்ற சொல் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கிறது. இது எந்த மொழியிலும் ஒரே சொல்லால் மொழி பெயர்க்க முடியாத ஒரு அற்புதமான சம்ஸ்கிருதச் சொல். தமிழில் அறம் என்று சொல்வோம். ஆனால் தர்மம் என்ற சொல்லின் எல்லாப் பொருளையும் அது தராது. தருமம் என்பதை ஒரே சொல்லால் விளக்கவே முடியாது.


பிறருக்குக் கொடுப்பதையும் தர்மம் என்று தான் சொல்கிறோம். (தானமும் தர்மமும் வெவ்வேறு. அதை பலர் ஒன்றாக எண்ணி குழப்பிக் கொள்வார்கள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இல்லாதவர் கேட்பின் தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமலே அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.) இது நீதியா, நியாயமா தர்மமா என்று கேட்கும்போது தர்மத்துக்கு வெறு பொருள் வருகிறது, அதாவது இது சட்டப்படி சரியா என்பதே ஆகும். ஒருவருடைய கடமையையும் தர்மம் (ஸ்வதர்மம்) என்கிறோம். ஒரு குடும்பத் தலைவனின் தர்மம் குடும்பத்தைப் பேணி காப்பது. ஒரு கணவனின் தர்மம் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது. ஒரு மருத்தவரின் தர்மம் நோயாளியை காப்பது. ஒரு நாட்டு குடிமகனின் தர்மம் நாட்டுக்கு உண்மையாக இருப்பது. இதே இந்து மதத்தின் தலைவர்கள் “நாம் எல்லோரும் இந்து தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்” என்று சொல்லும்போது அதன் பொருள் மிகவும் விரிவடைகிறது. உலகத்திலுள்ள மனிதர்கள் நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஓர் ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும். இதைத் தவிர இயற்கை விதித்த தர்மங்களும் உள்ளன. தேளுக்கு தர்மம் கொட்டுவது. சட்டம், கடமை, நேர்மையான நடவடிக்கை, சமூக தார்மீக அமைப்பு, குணநலம், ஒரு பொருளின் இயற்கையான நடவடிக்கை, பொறுப்பு ஆகிய அத்தனையும் தர்மம் என்னும் குடையின் கீழ் வந்து விடும். ஒரே மனிதன் பல நிலைகளில் பல தர்மத்தை பின்பற்றவும் வேண்டியுள்ளது. அதில் சில சமயம் இரு தர்மத்திற்கு நடுவில் மாட்டிக் கொண்டு எதை காப்பது என்கிற தர்ம சங்கடத்துக்கும் அவன் ஆளாகிறான்.


அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு பீஷ்மருக்கு ஏற்பட்ட குழப்பமும் அதன் பின் வந்த தெளிவும். மகாபாரதப் போரில் 9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னைக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால் தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால் தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மை தரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற ஞானம் உண்டாகிறது. இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறார் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார். அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார். வாய்மை என்பது என்ன என்று வள்ளுவர் சொல்லும்பொழுது பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்கிறார். ஆக பொதுதர்மத்திற்காக சுயதர்மத்தை விடுதலே தர்மம். அந்த விதிப்படி யுயுத்சு உயர்கிறான். (யுயுத்சு திருதராஷ்டிரனுக்கும் காந்தாரியின் முதன்மை பணிப்பெண் சுக்தாவுக்கும் பிறந்த மகன் ஆவான். பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருட்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தான். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வன் இவன் ஒருவரே ஆவார்.)


பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தர்மத்தைப் பற்றி கீதையில் போதித்ததை வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமபிரான். "சத்யம் வாத: தர்மம் சாரா: என்பது வேத வாக்கு. உண்மையை பேசு, தர்மத்தின் வழியில் நடந்து காட்டு என்பது இதன் பொருள். இந்தப் பொருளை மெய்யாக்கிக் காட்ட வந்ததே ராமாவதாரம். "ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்."-காஞ்சி மகா பெரியவா.

"நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்."- காஞ்சி மகா பெரியவா.

ராமபிரான் உத்தம புருஷனாக விளங்கி "மர்யாதா புருஷோத்தமன்" என்று புகழப்படுகிறார். ஸ்ரீ ராமரின் வழியை கடைபிடித்து வந்தால் அதாவது தர்ம நெறிப்படி வாழ்ந்தால் ராவணன் என்னும் காமப் பேயை ஓட்டிவிடலாம். அதன் பின் தூய்மையான மனத்தில் இன்பமான கிருஷ்ண லீலைகளை அனுபவிக்கலாம். ராமன் பெற்றோர் மேல் வைத்திருந்த அன்பு, சகோதரர்கள், நாட்டு மக்கள் மேல் வைத்திருந்த பாசம், குருமார்கள் மேல் வைத்திருந் மரியாதையும் பக்தியும், ஏகபத்தினி விரதனாக இருந்த பேராண்மை அனைத்துமே நமக்கு ஓர் எடுத்துக் காட்டு. நமக்காக தர்மம் ஸ்ரீராமனின் உருவெடுத்து வந்தது. கணவராக மகப்பேறு காலத்தில் மனைவியை பேணிக் காக்க வேண்டிய ராமன், அரசராக குடிமகன் சொன்ன சொல்லுக்காக சீதையை காட்டுக்கு அனுப்பினார். நமக்குக் கல் நெஞ்சராகத் தெரிந்தாலும் அவருக்கு அரசராக அவர் செய்ய வேண்டிய தர்ம செயல் கணவராக இருந்து செய்வதை விட முக்கியமானதாக ஆனது. ராமாவதாரத்தை எடுத்தது இராவணனை வதம் செய்வதற்காக மட்டுமல்ல மானிட தர்மத்தை நிலைநாட்டவே அவதரித்தார்.


தர்மம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லவேண்டும் என்றால் வேதத்தில் சொல்லியிருப்பதே தர்மம். இதை செய், இதை செய்யாதே என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் செய் என்று சொல்லியிருப்பதை செய்தால் தர்மம், செய்யாதே என்று சொல்லியிருப்பதை செய்தால் அதர்மம். வேதத்தில் குளி என்று சொல்லவில்லை சாப்பிடு என்று சொல்லவில்லை. ஆனால் குளித்துவிட்டு சாப்பிடு என்று சொல்கிறது. (கந்தையானாலும் கசக்கிக் கட்டு) எந்த சந்தேகத்தையும் நுட்பமாகன தகவல்களுடன் நிச்சயப் படுத்தும் வேதம். உண்மையை விளக்கக்கூடிய பிரமாணம் தான் வேதம். வேதம் தான் குரு. வேதம் இந்த உலகத்தில் நன்றாக இருப்பதற்கும் வழி சொல்கிறது, மோக்ஷம் அடைவதற்கும் வழி சொல்கிறது. முக்தி தான் இறுதி நோக்கம் நம் பிறவிக்கு. அதை அடைவதற்கு தர்மப்படி வாழ்வது தான் வழி.

வேதங்கள் தான் அனைத்து ஜீவராசிகளையும் தாங்குகிறது. அந்த வேதத்தை ஆதாரமாகக் கொண்டு தான் நம் வாழ்க்கை முறையே அமைந்திருக்கிறது. அவரவர் ஆசைப்படுவதை எப்படி நியாயமான முறையில் அடைய முடியும் என்பதை வழிகாட்டி கொடுக்கிறது. வேதத்தினால் தான் இந்த தர்ம மார்க்கமே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்து மதத்திற்கு இன்னொரு பெயர் சனாதன தர்மம். பெயரிலேயே தர்மம் உள்ளது, வாழ்வியல் நெறி தர்மப்படி இருக்கவேண்டும் என்பதற்கான குறியீடு இது. சனாதன தர்மம் என்றால் மிகப் பழமையான, தொன்மையான வேதத்தில் சொல்லப்பட்ட தர்மம். மோக்ஷத்துக்கு மட்டும் தான் வேதத்தை படிப்பது என்றில்லை. வேதம் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (திருவள்ளுவர் கூறிய அறம், பொருள், இன்பம், வீடு) அனைத்துக்கும் வழிகாட்டியாக உள்ளது.


சனாதன தர்மம் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் - இறைவனுக்கு செய்வது, துறவிகள் சொற்களை கேட்பது, பசியால் வாடி வருபவருக்குப் பிடி உணவு கொடுப்பது, இறந்தவர்களுக்கு செய்யும் நீத்தார் கடன், விலங்குகளை பேணி பாதுகாப்பது. இந்தக் கடமைகளை திருமூலர் எளிதாக

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- என்று திருமந்திரத்தில் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் சனாதனம் கூறும் இந்த ஐந்து கடமைகளையும் தனித்தனியாக ஐந்து அதிகாரங்களில் விளக்கிக் கூறியுள்ளார். திருவள்ளுவ மாலை தந்த சங்கப் புலவர்களில் ஒருவரான வெள்ளிவீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்தபொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யாஅதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனைஇதற்குரியர் அல்லாதார் இல்

என்கிறார்.

எவராலும் செய்யப்படாதது என்பதால் வேதம் செய்யாமொழி. பொய்யாமொழி என்பது திருக்குறள். இரண்டும் ஒன்றையே தான் கூறுகின்றன. உக்கிரபெருவழுதி என்னும் புலவர் நான்முகனே திருவள்ளுவராய் வந்து உதித்தார் என்று போற்றுகிறார்.

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையைவந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்சிந்திக்க கேட்க செவி

திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், புறநானூறு போன்ற இன்ன பிர பழந்தமிழ் நூல்களை ஆக்கியவர்கள் தாங்கள் நம்பிய வாழ்வியல் முறையைச் செயல்படுத்தி வந்த அறத்தை வலியுறுத்தி நூல்களை இயற்றினார்கள். அவை அனைத்தும் சனாதன தர்ம நெறிகளையே சொல்கின்றன.


எல்லா திசைகளிலும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டும் காட்டும் ஒளியே சனாதன தர்மம். இதனை நமக்கு எடுத்துரைக்க இதிகாசங்கள், புராணங்கள், அந்தந்தப் பகுதியில் மகான்கள் அருளிச் செய்த பாசுரங்கள், வழிகாட்டும் நூல்கள் அமைந்துள்ளன. சமய இலக்கியங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம், திருக்குறள், திருமந்திரம், திவ்ய பிரபந்தம் இந்த தர்மத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன, வழிகாட்டுகின்றன.


சனாதன தர்மம் என்று சொன்னாலே உடனே வர்ணம் என்று ஒன்றை எடுத்துவந்து குறை கூறுகிறார்கள். நால்வகை வர்ணம் என்பது பிறப்பால் வருவதல்ல. அஸ்வத்தாமன் தன்னுடைய தீய பழக்கங்காளால், செயல்களால் கீழ் நிலையை அடைகிறான். அரச குலத்தில் பிறந்த விஸ்வாமித்திரர் தன்னை பிராமணராக மாற்றிக் கொள்கிறார். வர்ணக் கலப்பில் பிறந்த எத்தனையோ பேர் மகான்களாக போற்றி வணங்கப் படுகிறார்கள். வேத வியாசர், நீதி நூல் தந்த விதுரர் பிறப்பும் அவ்வாறே வர்ண கலப்பில் தோன்றியவை தான். எத்தனையோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிராமண வர்ணத்தில் பிறக்காதவர்கள் தாம்.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் திருவள்ளுவர். சாந்தோக்கிய உபநிஷத் வர்ணம் என்பது குணங்களால் ஏற்படுவதே தவிர பிறப்பால் அல்ல என்று தெளிவாக சொல்கிறது. சத்திய கர்மா பற்றிய கதையில் "பூமியில் ஒருவன் எப்படி எங்கு பிறந்தான் என்பதை விட என்ன செயலாற்றி எதை அடைய விரும்பி நீ எதுவாக நினைக்கிறாய் என்பதே முக்கியம். அதிலேயே உன் வர்ணம் அடையாளப் படுத்தப் படுகிறது" என்கிறார் கௌதம மகரிஷி.


சனாதன தர்மம், ஒரு குற்றம் செய்து சட்டம் நம்மை தண்டிக்கத் தவறினாலும் நம் பாவ புண்ணியத்திற்கேற்ப நாமே பின்னொருநாளில் அதற்கான தண்டனையை அனுபவிப்போம் என்று சொல்கிறது.


அன்பை போதிக்கும் தர்மம் அதே சமயத்தில் அநீதியை, எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட அறத்தை பாதுகாக்க போரிட தயங்காதே என்றும் அறிவுறுத்துகிறது. முக்கியமாக இவ்வாறு எதிர்த்து தர்மத்தை நிலைநாட்டுபவர்களை அதிகமாக புகழ்கிறது. சீதையை இராவணன் களவாடிக் கொண்டு போகும்போது ஜடாயு பறவை ராவணனை தன் சிறகால் அடித்து முடிந்த மட்டும் போரிட்டு தடுக்கப் பார்த்தது. அதன் சிறகுகளை வெட்டி வீழ்த்துகிறான் ராவணன். பூமியில் விழுந்த ஜடாயுவிற்கு ஈமக் கடன்களை இராமரே இறுதியில் செய்கிறார். அந்த பாக்கியத்தை ஜடாயு பெறுகிறார்.


நம் மனத்திற்கேற்றது நம் தர்மம். சீதை கணவன் சொற்படி செய்வதே தர்மம் என்று நினைத்து அவர் சொற்படி தீயில் இறங்குகிறார். மீராபாய் கணவனை துறந்து கண்ணனை அடைவதே தன் தர்மம் என்று துறவறத்தை மேற்கொள்கிறார். இருவருமே இம்மண்ணில்பூஜிக்கப்படுகின்றனர்.சீதா தேவி மற்றும் மீராபாய் இருவரும் எம்பெருமான் சொன்னதைச் செய்யத் தேர்ந்தெடுத்தனர், அதாவது விசேஷ தர்மம் - இருவரும் பரமாத்மாவுக்கு மட்டுமே தலைவணங்க முடிவு செய்தனர்.


தர்மம் என்பது எண்ணம், சொல், செயல் ஒவ்வொன்றும் அறத்தின்வழி இருத்தல். மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும்.

உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும். சிங்கத்தின் தர்மத்தை நரியிடமோ, நரியின் தர்மத்தை ஓநாயிடமோ எதிர்பார்க்கக் கூடாது. மனிதர்களிலும் சிங்கம், புலி, நரி என உண்டு. ஒருவரின் தர்மத்தை மற்றவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், நேர்மை ஆளுக்கு ஆள் மாறக்கூடியதல்ல. அந்த நேர்மையே அவனை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். விதித்தன செய்தலும், விலக்கியன தவிர்த்தலுமே தர்மமாகும். நமது உன்னத தர்மத்தின்படி வாழ்க்கையை நடத்தும்போது மட்டுமே ஆத்மா மகிழ்ச்சியடையும். ஸ்ரீ ராமனையும் கிருஷ்ண பரமாத்மாவையும் துதித்துப் போற்றி அவர்கள் அருளால் தர்ம நெறிப்படி வாழ முற்படுவோம்.


ஜெய் ஸ்ரீராம்! ஹரே கிருஷ்ணா!

 
 
 

Commentaires


Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Anbezhil's musings. Proudly created with Wix.com

bottom of page