top of page

நாராயண நாராயண! - நாரதர்

  • Writer: Anbezhil
    Anbezhil
  • Apr 14, 2021
  • 8 min read

Updated: Apr 16, 2021

பகவத் கீதை பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ண பகவான் அர்ஜுனன் கேட்டதற்கு இணங்க தன் பெருமைகளை சொல்லும்போது தேவ ரிஷிகளில் நான் நாரதராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பெருமையுடையவர் நாரதர்.


வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில் நாரத பகவானைக் குறித்து நான்கு அடைமொழிகளை வைத்து வால்மீகி முனிவர் அவரை குறிப்பிடுகிறார்.

தபஸ்ஸ்வாத்⁴யாயநிரதம் தபஸ்வீ வாக்³விதா³ம் வரம் ।

நாரத³ம் பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் ॥ 1॥


அந்த நான்கு அடைமொழிகள், ‘தபோநிரதம்’ , ‘ஸ்வாத்⁴யாயநிரதம்’, ‘வாக்³விதா³ம்வரம்’, ‘முனிபுங்க³வம்’.

தபஸ் ‘ என்பது நம் சுகமான வாழ்வில் இருந்து வெளி வருவது என்று ஒரு பொருள். இந்த உலக வாழ்க்கை சுவாரசியமாக, பல சமயங்களில் இன்பமாகவும் உள்ளது. அந்த புலன் இன்பங்களில் இருந்து மனத்தை திருப்புவது மிகவும் கடினம். அதனால் அப்படி திருப்புவதே ஒரு தவம் ஆகும். 'ஸ்வாத்⁴யாயம்‘ என்றால் அப்படி திருப்பிய மனத்தை வேறு எதிலாவது செலுத்த வேண்டும் அல்லவா? செலுத்த வேண்டிய இடம் இறைவன் பற்றிய சிந்தனை. அப்படி மனத்தை திருப்பினால், அது தான் ‘ஸ்வாத்⁴யாயம்‘.

அப்படி ‘தபஸ்’ஸையும் ‘ஸ்வாத்யாய’த்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்பவர் நாரத முனிவர். ‘வாக்³விதா³ம் வரம்’ – சிந்தனை செய்த அந்த பகவானின் சரிதத்தை அழகாக எடுத்து சொல்லவும் தெரிந்தவர். ‘முனிபுங்க³வம்’ – மௌனமாக இருக்கிறவர். பகவத் விஷயம் பேசுவது மௌனத்திற்கு பங்கமாகாது. பல பெரிய மகான்கள் சில நாட்களில் மௌன விரதம் அனுஷ்டிப்பர். ஆனால் பஜனையில் கலந்து கொள்வார்கள், திருப்புகழ், அபங்கங்கள் பாடுவர். அது மௌன பங்கம் கிடையாது. இந்த நான்கு குணங்களுமே நாரதரின் உயரிய பெருமையை சுருங்கச் சொல்லிடுகின்றன.


நாரதீதி நர: ப்ரோக்த: பரமாத்மா சனாதன: (நாராதீய புராணம்) என்றும் எப்பொழுதும் குணபரிபூர்ணனான நரன் என்று பெயர். அதாவது ஸ்ரீமன் நாராயணின் தொடர்புடைய ஞானம் நாரம் எனப்படுகிறது. அதனை ததாதி - கொடுப்பதால் அவர் நாரதர் என்று அழைக்கப்படுகிறார்.


வேதத்தினால் காட்டப்படும் பரம்பொருள் பூமியில் ராமனாக அவதாரம் செய்தவுடன், வேதம், வால்மீகி முனிவர் வழியாக ராமாயணமாக வெளி வந்தது. வேதமே தான் ராமாயணம். ராமாயணமே வேதம். அதை ஒரு குருமுகமாக வால்மீகி முனிவருக்கு உபதேசம் செய்து, அவர் மூலமாக அந்த காவியம் வெளிவர வேண்டும். அதனால் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். இந்த உலகத்தில், தற்காலத்தில், குணவான் என்று தொடங்கி ஒரு பெரிய பட்டியலாக குணங்களை அடுக்கி வால்மீகி முனிவர் இவையாவும் ஒரு மனிதனிடம் இருக்க முடியுமா, நீங்கள் அப்படி எவரையேனும் பார்த்திருக்கிறீர்களா என்று நாரதரிடம் கேட்கிறார். அப்பொழுது நாரதர் எனக்கு அப்படிப்பட்ட ஒருவரை தெரியும் அவர் தான் ராமர் என்று வால்மீகிக்கு விவரமாக சொல்கிறார். அதுவே ராமாயாணமாக உருவாயிற்று.


ஸ்ரீமன் நாராயணனின் நாபிக்கமலத்தில் இருந்து அவதாரம் செய்தவர் பிரம்மா. இவருடைய முதல் நான்கு மானச புத்திரர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோர். ஆனால் இவர்கள் பிரம்மாவின் ஆணையான இல்லறத்தில் ஈடுபட்டு பிரபஞ்சத்தில் மனிதர்களை உருவாக்குவதில் நாட்டம் இல்லாமல் அவ்வாணையை மறுத்து நாராயணனை அடைவதே குறிக்கோள் என்று தவம் செய்ய கிளம்பிவிட்டனர். அதன் பின் ஒன்பது முனிவர்களுடன் நாரதரும் மானச புத்திரர்களாக பிரம்மாவுக்குத் தோன்றினர். மற்ற முனிவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு குழந்தைகளை உருவாக்கி பிரம்மாவின் படைப்புத் தொழிலை சிரமேற்கொண்டு செய்தபோது நாராதர் மட்டும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிகக்கப் போவதாக சொன்னார். அதை அனுசரிக்கும் முறையை உபதேசிக்க வேண்டும் என பிரம்மாவிடம் வேண்டினார்.


கோபம் கொண்ட பிரம்மா, நீ மேற் கொள்ள எண்ணும் பிரம்மச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக பிறந்து பல சிக்கல்களுக்கு ஆளாகி தவிக்கக் கடவாய் என்று சபித்து விடுகிறார். நாரதர் வருத்தமுற்று தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூற, பிரம்மன் என் எண்ணத்துக்கு மாறாக இருப்பதே தவறு என்றார். நீ கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்படுவாய் என்றார். அப்பொழுது நாரதர், அதற்குப் பிறகாவது சாபவிமோசனம் கிடைக்குமா என்று கேட்க, கந்தர்வனாக இருக்கும் போது ஒரு முனிவரின் சாபம் பெற்று தாழ்குலத்தில் மானிடனாகப் பிறப்பாய் அதன் பிறகே சாபவிமோசனம் என்றும் கூறினார். இவ்வாறு தந்தையாகிய பிரம்மனிடமே நாரதர் சாபம் பெற்றார்.


பிரம்மனின் சாபப்படி கந்தர்வர்களில் சிறந்த இசைமேதையான உபன் மகனாக உபவருக்கன் என்ற பெயரில் பிறந்து மகதி என்ற யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றிருந்தான். பிரம்மசிரேஷ்டிரர் முனி தன் யாகசாலைக்கு உபவருக்கனை அழைக்க சாமகான வேதத்தை யாழிசையுடன் இசைக்க அழைத்திருந்தபோது அங்கிருந்த இளம் பெண் இந்த இசையில் மயங்க அவளைப் பார்த்த உபவருக்கனும் மயங்கியதால் இசையில் தடுமாற்றம் ஏற்பட பிரம்மசிரேஷ்டருக்கு கோபம் வந்தது. சாம வேதகானத்தில் பிழையை உண்டாக்கியதால் நீ ஈன குலத்தில் மானிடனாய் பிறப்பாய் என சாபமிட்டார்.


முனியின் சாபத்தைப் பெற்றதால் வருத்தமுற்ற உபவருக்கன் யோகத்தில் ஆழ்ந்து தன் உயிரை விட்டான். கன்யாகுப்ஜ நாட்டில் தருமியன்-கலாவதி என்ற ஏழை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தான. அவன் பிறந்ததும் நாட்டில் சுபிட்சமாக மழை பொழிந்ததால் அவனுக்கு நாரதர் எனப் பெயரிட்டனர். (நாரதர்-நீர் அளித்தவர்) தாய் தந்தையர் இறக்க காட்டில் தவம் மேற்கொண்டார். ஸ்ரீமன் நாராயணன் தோன்றி நாரதா நீ இப்பிறவியில் என்னைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் நிறைவேறும் என்றதால் தெளிந்த நாரதர் மீண்டும் யோகத்தில் அமர்ந்து தன் உயிரை விட்டார்.


உடலைக் களைந்து சுய ரூபம் அடைந்து சத்ய லோகமடைந்து தந்தை பிரம்மனை வணங்கி, பின் கையிலையில் சிவனை வணங்கி மோட்சம் பெறும் வழியைக் கேட்டார். பிரமச்சரிய விரதம் கொண்டு மனத்தையும் ஐம்புலன்களையும் அடக்கி இன்சொல் கூறி அறவழியில் நடந்து இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டும் உண்டு, சதா இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார் பரமசிவன். அதன்படி சதா சர்வ காலம் இறைவனை நினைத்து திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த நாரதர் பத்திரிகாசிரமம் சென்று நாராயணனை தரிசிக்க அவர் நாரதரை பூலோகத்தில் சிருஞ்சியர் மகள் சுவர்ணகிரீயை மணந்து வாழ அறிவுருத்த அவ்வாறே சுவர்ணகிரீயை மணந்து வாழ்ந்து கொண்டிருந்த நாரதருக்கு அங்குவந்த சனத்குமாரர் தாரக மந்திரத்தை உபதேசித்தார்.


நாராயணனின் தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதும் நாரதர் பற்றற்ற நிலையை அடைந்து கானகம் சென்று தவமேற்கொண்டார். மகாவிஷ்ணு காட்சியளிக்க இசையில் வல்லவராக வரம் பெற்றார். தன் தாயையும் தந்தையையும் வணங்கி தாயிடம் உள்ளது போன்ற வீணையையும் அதை மீட்டும் ஞானமும் பாடும் திறமையும் பெற்றார். அவரின் இசை நாரத கானம் என்றாயிற்று


உலகம் தோன்றிய காலம் முதலே தோன்றி முக்காலமும் உணர்ந்து, மூவுலகிலும் சஞ்சாரம் செய்து நொடி நேரத்தில் மூவுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றல் படைத்த த்ரிலோக சஞ்சாரி அவர். அவர் த்ரிலோக சஞ்சாரியாக இருப்பதே ஒரு சாபத்தினால் வந்த விளைவு. தட்சப்பிரஜாபதி தன் குலத்தை விரிவாக்க 1000 மகன்களை மூன்றுமுறைத் தோற்றுவிக்க ஒவ்வொரு முறையும் அவர்களை பக்தி வழியில் ஈடுபடவைத்து முக்தி மார்க்கத்தில் நாரதர் செலுத்திவிட கோபம் கொண்ட தட்சப்பிரஜாபதி, நாரதா நீ இனி ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரு முகூர்த்த காலத்திற்குமேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் உன் தலை வெடித்து விடும் எனச் சாபம் கொடுத்தார். தன் தாயின் (சரஸ்வதி) தந்தையின் (பிரம்மா) ஆலோசனைப்படி நாரதர் மாதையூர் சென்று சிவனை வழிபட்டு தவமிருந்தார். சிவனிடம் தான் நினைத்தவுடன் எந்த உலகிற்கும் செல்லும் ஆற்றலையும் புகழையும் வேண்டிப் பெற்றார். தான்பெற்ற சாபப்படி நாரதர் ஒரே இடத்தில் இல்லாமல் எல்லா உலகங்களுக்கும் பயணித்தவாறே இருக்கின்றார். பகவானின் பரம பக்தனாக எந்நேரமும் நாராயணன் நாமம் உச்சரிக்கும் திரிலோக சஞ்சாரி ஆகும் பேறு பெற்றார்.


அவர் தோன்றியதிலிருந்தே நாராயணனை தன் சிந்தையில் வைத்து துதித்து வந்தார். அவர் கையில் அவர் உருவாக்கிய வீணை எப்பொழுதும் அலங்கரிக்கும். அவ்வீணையின் பெயர் மஹதி. அவர் கர்நாடக இசையின் ஆதி குரு, இசைப் புலவர். மஹதி வீணையில் இருந்து பிறந்த ஸ்வரங்களே, மஹதி ராகமாகும். ஸ்ரீ புரந்தரதசராக அவதாரம் எடுத்தவரும் நாரதரே. மாபெரும் அறிஞரும், வேத விற்பன்னரும், பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட. அவரது தந்தை பிரம்மதேவரால் கூட எளிதில் செல்லவியலாத, வைகுண்ட லோகத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்லும் தகுதி பெற்றவர். வேதமந்திரங்களை ஆகாயத்திலிருந்து கிரகிக்கக்கூடிய விசேஷத் தன்மை பெற்ற ரிஷிகளில் ஒருவராக நாரதர் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார், ஸாமவேதத்திலும் இவர் சிறப்பிடம் பெறுகிறார். அவர் இடம்பெறாத இந்து புராணமே இல்லை என்று சொல்லலாம்.


நாரத புராணம் என்பது பதினெண் புராணங்களில் தேவரிஷியான நாரதரைப் பற்றி கூறுவதாகும். இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் சுலோகங்களைக் கொண்டது. நாரத முனிவர் சனத்குமாரர்களுக்குக் கூறிய நாரத புராணத்தினை மீண்டும் சூதர் என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல், ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள், கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!


நாரத புராணத்திலுள்ள நாரத பஞ்சராத்திரி நாரதரின் சிறப்பைப் பற்றி சொல்லுகிறது. நாரதர், சாஸ்திரங்கள், சுருதி, ஸ்ம்ரிதி, இதிகாசம், புராணங்கள், வேதங்கள், இசை, பூகோளம், கணிதம், ஜோதிடம், யோகா ஆகிய சகல வித்தைகளிலும் திறமைசாலி. நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்! இவர்தான் உலகின் முதல் பத்திரிகையாளர் என்றும் கூறலாம். ஏனெனில் இவரின் பணியே மூவுலகையும் சுற்றிவந்து ஒருவர் பற்றிய செய்திகளை மற்றவரிடம் கூறுவதுதான். பிரபஞ்சங்களின் பல்வேறு இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் விசேஷ தூதராகவும் நாரதர் செயல்படுகிறார். அனைத்து அசுரர்களும், தேவர்களும் மதிக்கும் ஒரு மாமுனி நாரதர் ஆவார். அனைத்து தேவர்களையும் சிறைபிடித்த ராவணன் கூட நாரதரை விட்டு வைத்ததன் காரணம் அவர் மீதிருந்த மரியாதைதான்.


நாராதரைப் பற்றி நிறைய கதைகள் உள்ளன. அவை அனைத்தும் மிக சுவாரசியமானவை, நீதியை போதிப்பாவை. அதில் ஒரு கதை இது: தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.


ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப் பட்டார். அவரது கவலையை கண்ட மஹாலக்ஷ்மி தாயார் ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள். அதற்கு நாரதர் தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது என்றார். அதற்குத் தாயார் ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் என்றாள். நாரதரும் ரிஷிகேசம் சென்றார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் என்ன நாரதரே சௌக்கியமா என்றது. பேசும் மீனை அதிசயமாக பார்த்த நாரதர், எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா என்று மீனை திருப்பி கேட்டார். மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் என்றது. ஒரே தாகமாக உள்ளது. குடிக்க தண்ணீர் தான் கிடைக்கவில்லை அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது மீன். இதைக் கேட்ட நாரதருக்கு கோபம் வந்தது. நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது என்றார். மீன் சிரித்துக்கொண்டே நீ மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உனக்குள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறாயே, நீ கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க நாரதர் வியப்புடன் மீனை பார்த்தார். மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்தார். நாரதா என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது. கலகம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்துள்ளது. அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன்? யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய் என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் . என்ன கவலையாக இருந்தாலும் நாராயண நாமத்தை ஜபித்தால் அதுவே நாளும் பேரின்பம், யாவும் நலமாகவும் முடியும் என்பதை கூறுகிறது இந்தக் கதை.


இன்னொரு கதையில் நாராதருக்கு உலகிலேயே யார் பெரியவர் என்கிற சந்தேகம் வருகிறது. பலரையும் சந்தித்து இறுதியில் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனையே, பக்தியால் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பக்தர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று புரிந்து கொள்கிறார். இவை அவருக்குத் தெரியாததல்ல. நமக்குத் தெரியப்படுத்தவே இந்த சந்தேகமும் சந்தேக நிவர்த்தியும்.


நாரதர் என்ற பெயரை கேட்ட மாத்திரத்தில் நம் மனத்தில் தோன்றுவது அவரின் பக்தி தான். பக்திக்கே இலக்கணமான நாரதர் நாரத பக்தி சூத்திரத்தை நமக்கு அளித்துள்ளார். சூத்ரம் என்பது ஒரு formula போன்றது - ஒரு சிறிய வாக்கியத்தில் பேருண்மைகளை சுட்டுவது. வியாசரின் பிரம்ம சூத்ரம் உபநிஷத்துக்களின் உண்மை கருப்பொருள் பிரம்மமே என்பதை விளக்குகின்றது. ஜைமினியின் தர்மசூத்ரம் கர்ம மார்கத்தின் பொருளையும் பதஞ்சலி யோகசூத்ரம் யோக மார்கத்தையும் விளக்குகின்றன. இதைத் தவிர பாணினியின் வியாகரண சூத்ரங்கள் வடமொழி இலக்கணத்தை விளக்குகின்றன. நாரதர் வியாசரிடம் வருகிறார். அப்போது வியாசர் மனவருத்தத்தில் இருக்கக் கண்டு காரணத்தை கேட்கிறார். வியாசர் “ நான் மகாபாரதம் எழுதினேன். எவ்வளவோ தர்மங்களை விவரித்தேன். ஆனாலும் என் மனம் அமைதியுறவில்லை.” என்று கூற நாரதர் மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி கூறியிருந்தபோதும், பக்தியின் பெருமையையோ பகவானின் பெருமையையோ முழுதும் கூறவில்லை என்று சொல்லி வியாசரை பாகவதம் எழுதத் தூண்டுவதற்காக பக்தியின் பெருமையை இந்த சூத்ரங்கள் மூலமாகக் கூறுகிறார்.


பக்தி முக்கியமான மார்க்கம் என்று ஏன் சொல்லப்படுகிறது? இது யாவராலும் பின்பற்றக்கூடியது. ஞான மார்கத்திற்கு தேவையான சாஸ்த்ர ஞானம் யோகப் பயிற்சி இவை எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாதவை. பக்தி செய்ய எந்தத் தகுதியும் தேவை இல்லை. நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்ட அன்பு ஒன்றே போதுமானது. அதனால்தான் கண்ணன் கீதையில் என் பக்தர்கள் எவ்வர்ணத்தாராயினும் அவர்கள் என்னையே பற்றி மேலான கதியை அடைகிறார்கள் என்கிறார். பக்தன் எங்கும் இறைவனையே காண்கிறான். ‘பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன், என்ற மனோபாவத்தில் இருப்பதால் எதனிடமும் எவரிடமும் வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுதான் ந த்வேஷ்டி என்பதை உணர்த்துகிறது, பக்தனுக்கு உலகம்முழுவதும் உறவாகவே தெரிகிறது. ‘வசுதைவ குடும்பகம்.’

நான் எனது என்ற எண்ணம் இல்லாததால் எங்கும் சமநோக்கு ஏற்படுகிறது. இவை போன்ற எளிமையான ஆனால் பிறவிப் பெருங்கடலை நீந்தத் தேவையான வழிகளை நாரத பக்தி சூத்திர நூல் சொல்கிறது. சூத்திரங்களும் அதற்கான விளக்கங்களும் புத்தக வடிவில் நமக்கு இப்போது கிடைக்கின்றன. விருப்பம் உடையவர்கள் அவற்றை வாங்கி படித்து தெரிந்து கொள்ளலாம். நாரதர் ப்ருகு முனிவரின் மகள் லக்ஷ்மியை மகாவிஷ்ணுவிற்கு திருமண செய்து கொடுத்தார் . இந்திரனின் ஒப்புதலோடு ஊர்வசி புருவர் திருமணத்தை முடித்தார். வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகித்தவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்தினார்.நாரதரின் தூண்டுகோலால் வால்மீகி ராமாயணத்தையும் , வியாசர் மகாபாரதத்தையும் பின்பு ஸ்ரீமத் பாகவதத்தையும் படைத்தார்கள். நாரதரின் உதவியால் துருவனும், பிரகலாதனும் ஞானியர் ஆகி உலகில் அழியா இடம் பெற்றனர். மிகச் சிறு வயதிலேயே தியானம் மேற்கொள்ள இருந்த துருவனை முதலில் தடுக்க முயன்றார் நாரதர். ஆனால், துருவனின் கடுமையான உறுதியைக் கண்ட நாரதர் விஷ்ணுவை நாடி தியானிக்க மந்திரமான நமோ பகவதே வாசுதேவாய என்பதனை உபதேசித்து துருவனை மகோன்னத நிலைக்குச் செல்ல வழிகாட்டினார். அசுரனான ஹிரண்யகசிபுவுக்கு எப்படி பக்த பிரகலாதன் பிறந்தார்? அவர் கருவில் இருக்கும் போது நாராயண, நாராயண என்று பாடி பாடி நாரதர் உருவேற்றுகிறார். அசுர குணம் சத்துவ குணமாக மாறி விடுகிறது.

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகய்யருக்கு ராமபிரானே சீதை லக்ஷ்மணனுடன் சேர்ந்து காட்சியளித்திருக்கிறார். நாரத மகரிஷியும் அவர் கனவில் தோன்றியுள்ளார். கனவில் தோன்றி ஸ்வரார்ணவம் என்கிற சங்கீத நூலை கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். அன்று முதல் அவரின் சங்கீத ஊற்று மேலும் ஆறாகப் பெருக ஆரம்பித்தது. அன்று முதல் தன் ஆத்மார்த்த குருவாக மகரிஷி நாரதரை போற்றி அவர் மேல் உள்ள பக்தியின் வெளிப்பாடாக நிறைய கீர்த்தனங்களை இயற்றினார். குறிப்பிட்டு சொல்லும் வகையில் ராக பைரவி என்ற ராகத்தில், ஆதி தாளத்தில் ஸ்ரீ நாரத முனி குருராய என்ற பாடலை அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.


நாரதரிடம் பல்வேறு விசேஷ தன்மைகள் உள்ள போதிலும், அந்த விசேஷ தன்மைகளுக்கெல்லாம் விசேஷ தன்மையாக விளங்குவது அவரது ஹரிபக்தி பிரச்சாரமே. பகவத்கீதையில் (18.68-69) பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்யும் பக்தனே தனக்கு மிகப் பிரியமானவன் என்றும், அவனைக் காட்டிலும் பிரியமானவன் வேறு யாருமில்லை என்றும் தெளிவாகக் கூறுகிறார். மூவுலகமும் சுற்றித் திரிந்து பகவத் பக்தியை எடுத்துரைத்த நாரதர் அத்தகு மிக மிக பிரியமான பக்தராக விளங்குகிறார். நாரதர் தன்னுடைய இச்சேவையின் மூலம் பல்வேறு தூய பக்தர்களை உருவாக்கியுள்ளார். நாரதரால் நாராயணனைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டு மனம் மாறியவர்களின் எண்ணிக்கை ஏராளம். பிரகலாதர், துருவன், வியாஸர், வால்மீகி, வஸுதேவர், யுதிஷ்டிரர், பிராசீனபர்ஹிஷத், பிரசேதர்கள், சித்ரகேது, சது:-ஸனர்கள், ஹர்யஷ்வஸ் ஆகியோர் நாரதரால் பிரச்சாரம் செய்யப்பட்டவர்களில் முதன்மையானவர்கள். இன்றும் அவரால் வந்த ஸ்ரீமத் பாகவதம் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது.


அனைத்து தரப்பு மக்களுக்கும்நண்பனாக, குருவாக மற்றும் வழிகாட்டியாக திகழ்கிறார். நரம் பரமாத்மா விஷ்யாகம் ஜ்ஞானம் தததி இதி நாரத:, “கடவுளைப்பற்றியஞானத்தைவழங்குபவர்நாரதர்” என்று ஷப்த-கல்பத்ரும கூறுகிறது. இவர் சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் மிகப் பிரியமானவராக இருக்கிறார்.


தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பந்தாள் செல்லும் வழியில் கடலங்குடி என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நாராதருக்கு தனி சன்னதி உள்ளது. இதைத் தவிர கர்நாடகாவில் தவணக்கிரி மாவட்டதில் சிகட்டேரி என்னும் ஊரில் நாராதமுனிக்குத் தனி ஆலயம் உள்ளது. தேவரிஷி நாராதமுனியின் ஜெயந்தி நாள் இவ்வாண்டு மே 9, சித்திரை 26 வருகிறது.

அவரைப் போல என்றும் இறை பக்தியுடன் இருக்கவும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறவும் நாம் நாரதர் அருளை நாடுவோம். அவர் ஆசி பெறுவோம் நாராயண நாராயண! நாராயண நாராயண!



சில உபரி தகவல்கள்:மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால் எந்த திரைப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார் என்று தோன்றுகிறது அல்லவா? முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனல் நாரதர் இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் சீராமத்தினைப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.


பகவான் கிருஷ்ணர் தன்னை ஏளனம் செய்பவர்களையும் தன்னுடைய எதிரிகளையும்கூட மன்னித்துவிடுவார். ஆனால் தன்னுடைய பக்தர்களை நிந்திப்பவர்களை அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இவ்வளவு சிறப்புமிக்க நாரதரை ஏளனம் செய்வது மாபெரும் குற்றமாகும். ஏதேனும் ஓரிடத்தில் யாரேனும் ஒருவர் கலகம் செய்தால், அவரை “நாரதர் வேலை செய்கிறார்” என்று கூறுவது சற்றும் பொருத்தமற்ற கூற்றாகும். ஏதோ காரணத்தினால், முன்னரே கூறியபடி மனசாட்சியற்ற திரைப்பட இயக்குநர்களினால், மக்கள் நாரதரைப் பற்றி தவறான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, அவ்வாறு செய்த நாமும் அத்தகு குற்றத்தை இனியாவது செய்யாதிருப்போம்.


https://valmikiramayanam.in/?p=3696

https://www.naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-23-14-37-03

https://worldsanathanadarmam.blogspot.com/2017/07/

 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Anbezhil's musings. Proudly created with Wix.com

bottom of page