பெரிய திருவடி- கருட பகவான் - கருடாழ்வார்
- Anbezhil
- May 3, 2021
- 10 min read
Updated: May 4, 2021
#கரோனா தொற்று இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது. எந்த தெய்வத்தை வழிபட்டால் நோய் நீங்கும் என்று யோசித்தபோது மனத்தில் தோன்றியவர் கருட பகவான் அல்லது கருடாழ்வார். வேதத்தின் உருவம் தான் கருடன். அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன், சர்ப்பங்களை உணவாகக் கொள்பவர். இந்தக் கரோனாவையும் உணவாகக் கொண்டு நம்மை இந்த கடும் ஆபத்தில் இருந்து காக்க அவரை வழிபடுவோம்.
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன். நவ நாகங்களில் ஆதிசேஷனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன். ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் இவர் தான். பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவரும் கருடன் தான். கருடனே பெருமாளுக்கு ஆசனம், கருடனே பெருமாளுக்கு வாகனம், அதுவும் தவிர அவரே தான் பெருமாளுக்கு வெற்றிக் கொடியும் ஆவார். கோவில் நுழைவாயிலுக்குள் சென்றவுடன் த்வஜஸ்தம்பம் உள்ளதே அது தான் கருடக் கொடி. இப்படி பல பெருமைகளையும் சக்தியையும் உடையவர் விஷமாகப் பரவும் கரோனாவுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதா? அவ்வாறு செய்ய வேண்டுவோம்.

ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாள் சன்னதிக்கு நேர் எதிராக கருட பகவானுக்கும் சன்னதி இருக்கும். பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் உண்டு. அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும். பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். அதே போல முதலில் கொடிமரத்தின் முன்னே நமஸ்கரித்து விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அவர் நித்திய சூரி அதாவது வைகுண்டத்தில் பெருமாளுக்கு எப்பவும் சேவை செய்து கொண்டிருக்கும் பேறு பெற்றவர். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. அருணகிரி நாதர்
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!
தாவடி ஓட்டும் மயிலிலும் என்று முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார். எனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறார். பறவைகளில் நான் கருடனாக உள்ளேன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார். அந்த நாளே கருட பஞ்சமி என்று கொண்டாடப் படுகிறது. சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கஸ்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது. ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர். ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி. கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார். சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள். இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு. எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன். இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும், கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன். தன் கையில் அமிர்த கலசம் கிடைத்தும் சுய நலத்திற்காக பயன்படுத்தாமல், தன் தாயை மட்டும் விடுவித்து மீண்டும் தேவர்களிடம் ஒப்படைத்தவர் கருடன்.

கருடன் கருடாழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார். கிருத யுகத்தில் அஹோபிலத்தை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார். பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார். ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.
கஜேந்திர மோக்ஷம் வைபவத்தில் கருடாழ்வார் பங்கு உலகறிந்ததே! கருடாழ்வார் வாகனத்தில் விரைந்து வந்து தனது விஷ்ணு சக்கரத்தை ஏவி முதலையின் கழுத்தை துண்டாடி முதலில் ஹு ஹுவை முதலை ரூபத்தில் இருந்த கந்தரவனை சுவர்க்கம் கொண்டு சென்றார். சாப விமோசனம் பெற்ற கஜேந்திர மன்னன் மோக்ஷம் அடைந்தான். பெருமாள் தன் கருட வாகனத்தில் விரைந்து வந்த வேகம் சொல்லில் விவரிக்க முடியாது. அதனால் தான் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பராசரபட்டர் இப்படிப் பாடுகிறார்.
'ஹே ரங்கநாதா! நீ அந்த யானையை ரக்ஷித்ததற்காக உன்னை, நமஸ்கரிக்கவில்லை. இந்த அஞ்சலி எதற்கு என்றால் நீ ஓடிவந்த வேகத்துக்காக! கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
கருட உபாசனை பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச் சிலரே அறிவர். கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்பது உண்மை.
கருட காயத்ரி மந்திரம்:
‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
இதன் பொருள்: பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார். இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி கருடனை வழிபடுபவர்களுக்கு விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும். கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. கருட மந்திரங்கள் பல உள்ளன. அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி மந்திரம் தான்.
கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-
ஓம் க்ஷிப ஸ்வாஹா
ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும். கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும். இதை செய்ய முடிந்தவர்கள் செய்து நம் மக்களிடையே பரவி வரும் கரோனாவை தடுக்கவும் உலக நன்மைக்காகவும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இவருக்குரிய இன்னொரு ஸ்லோகம்:
அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:
பொருள்:
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர். பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும். பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும். அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளனர்.
அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும். மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது. இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து கருட தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்கள் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.
இவரை வழிபட்டால் நாக/சர்ப்ப தோஷம் விலகும். ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும். கால சர்ப்ப தோஷ ( இதனால் பலருக்குகத் திருமணம் விரைவில் கூடி வராமல் இருக்கும்) பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம். ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி, மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார். பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு வர மனோதிடம் உண்டாகும். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சௌபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த ஆச்சாரியராக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார். இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு குருவின் மூலமாக கற்றுக் கொண்டு பாராயணம் செய்து நாம் பயன் அடையலாம். ஸ்ரீ மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம் என்று அவர் புராணம் கூறுகிறது.
கேரளாவில் கருடபகவானை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம். அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது. எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம். கருட புராணம் என்னும் நூலில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின்
அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி கருடனிடம் கூறிய விவரங்களே கருட புராணம் என்று அழைக்கப்படுகிறது. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது
காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்
கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-
1.விசாலா -புன்னகை பூத்த பார்வை 2.கல்யாணி - மான் போன்ற பார்வை 3.தாரா - குருக்குப்பார்வை 4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை 5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை 6.அவந்தீ - பக்க வாட்டுப் பார்வை 7.விஜயா - கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை 8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை
முற்காலத்தில் சன்யாசிகள், சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள். அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள். கருட மந்திரத்தை லட்சம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள். இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள். அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது. யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.
தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன. தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் போது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பக்ஷிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர்,மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால் நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! கருடப் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். கருடாழ்வாரை வானத்தில் பார்த்தால் 'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று சொல்லி வணங்குவது வழக்கம். (சிறுவர்களாக இருந்தபோது அப்படி வானத்தில் பார்த்தால் 'கருடா, கருடா பூ போடு' என்று சொல்லியிருக்கிறீர்களா? அது நம் நகத்தில் வெண்மையாக போடும் என்பது நம் குழந்தைத் தனமான ஆர் எண்ணம் :)) சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம். வேதங்கள் எங்கெல்லாம் ஒலிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நிச்சயம் இவரின் தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாகவும் புராணம் கூறுகிறது. தாயை விடுவிக்க அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும்,அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும், கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. இவர் தான் பெருமாளுக்கும் தாயாருக்கும் இங்கு திருமணம் நடத்தி வைத்தார். இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே. வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம். சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம். கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட, வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும். கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும். இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார். கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் கருட சேவை உத்சவம் மிகவும் பிரபலமானது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு டி.எஸ்.ஆர். பெரியதெருவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இது ஒரு கண்கொள்ளா காட்சியாகும். இதைமுன்னிட்டு சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராகசுவாமி, ராஜகோபாலசுவாமி, பாட்ரசாரியார் தெரு கிருஷ்ணசுவாமி, வெங்கடராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி, மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி, புளியஞ்சேரி வேணுகோபால்சுவாமி,கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகிய கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளி 12 கருட சேவை நடைபெறும்.
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.
ஆழ்வார் திருநகரியில், நம்மாழ்வார் வைகாசி விசாக உற்சவத்தின் ஐந்தாம் திருநான்று காலை ஆழ்வார்/ஆதிநாதர் கோவில் வாசல் பந்தலில் நவதிருப்பதி எம்பெருமான்களும் ஒவ்வொருவராக எழுந்தருள்வார்கள். ஆழ்வார் அந்தந்தப் பெருமாளைப் பிரதட்சினமாக வந்து, அவர்கள் மீது தாம் அருளிச்செய்த திருவாய் மொழிப் பாசுரங்களைப் பாடுவார். ஆழ்வார் பாடியதை இன்று அரையர் தாளத்துடன் பாடுவார்.ஒவ்வொரு பெருமாளும் ஆழ்வாருக்குத் தகுந்த மரியாதைகள் தீர்த்தம், சடகோபன், சந்தனம், மாலை, வஸ்திரம் (பரிவட்டம்) அருளுகின்றனர். இரவு ஆழ்வார் ஹம்ச வாகனத்திலும், அவரது உத்தமர் சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலியிலும், ராஜகோபுரத்துக்கு வெளியே எழுந்தருளி, கருடன் மீது ஆரோகணித்து வரும் நவ திருப்பதி பெருமாளை வரவேற்கக் காத்திருப்பார்கள். இதை கானொளியில் இங்கு கண்டு தரிசிக்கலாம். https://www.youtube.com/watch?v=bf5s8G2wufA&ab_channel=NellaiTimesnow
ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனிஏற்றம். ஏனென்று பார்ப்போம். முகமதியர்கள் படையெடுப்பின் போது நம்மாழ்வாரைக் காப்பாற்ற அர்ச்சகர்கள் அவரை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர். அப்போது நேர்ந்த பல இடர்ப்பாடுகளில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணவில்லை. ஒவ்வொரு முறையும் கருடனே ஆழ்வாரைக் காட்டிக் கொடுத்தார். கோழிக்கோடு பக்கத்தில் திருக்கணாம்பி என்னும் இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதே சமயத்தில்,ஶ்ரீரங்கத்தின் மீது ஊலுக்கான்(முகமது பின் துக்ளக்), படையெடுத்து வந்த போது நம்பெருமாளையும், உபய நாச்சிமார்களையும், எடுத்துக்கொண்டு பிள்ளைலோகாசார்யர் தெற்கு திசை நோக்கி வந்தார். ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தியபின்னர், அவருடைய சீடர்கள் அவரை எடுத்துக் கொண்டு கேரளா பக்கம் வந்தார்கள். அவர்களும் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர். அங்கு நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு தம் வட்டமனையையும், முத்துச்சட்டையையும் கொடுத்தார். அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு நதியைக் கடக்க படகில் சென்றனர். நம்பெருமாள் சென்ற படகு முன்னால் சென்றுவிட்டது. ஆழ்வார் சென்ற படகு நதியின் அலைகளில் தடுமாறியதில் நம்மாழ்வார் தண்ணீரில் வீழ்ந்து விட்டார். நதியின் ஆழத்தில் எங்கு விழுந்தார் என்று தெரிய வில்லை. அப்போது அங்கு பறந்து வந்த கருடன் ஓரிடத்தில் வட்டமிட்டு ஆழ்வார் அங்கிருப்பதைக் காட்டினார். ஆழ்வாரை மீட்டவர்கள் மேலும் பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி, ஆழ்வாரை முத்திரிப்பூ மலை அடிவாரத்தில் ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் மூடி வைத்துவிட்டுத் திரும்பி விட்டனர். சில காலம் கழித்து ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச் சென்றவர்களுக்கு ஆழ்வாரை வைத்திருந்த இடம் தெரியவில்லை. அப்போது ஆழ்வார் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கருடன் கூவி அவர்களுக்குக் காட்டியது. மிக சிரமப்பட்டு அவர்கள் ஆழ்வாரை எடுத்துக்கொண்டு திருநகரி வந்தனர். ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து காடாக மாறி விட்டது. காட்டில் பல புளிய மரங்கள் வளர்ந்து விட்டன. ஆழ்வார் 16 ஆண்டுகள் இருந்த புளியமரம் எது என்று அவர்களால்(திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் சிஷ்யர்கள்) கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போதும் ஒரு கருடன் வந்து அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார். அங்கே காட்டுக்குள் இருந்த கோவிலைக் கண்டுபிடித்து புணர் நிர்மாணம் செய்து நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இவ்வாறாக கருடாழ்வார், நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்தார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இங்கு கருடனுக்கு விசேஷ ஆராதனை நடைபெறுகிறது
மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள். குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார். பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. (கருடன் பறவையை விரித்திருப்பது போன்ற வியூகம்) இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும். காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார். அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை தங்கப் பறவை என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள். கழுத்தும் தலையும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பருந்து வகைப் பறவை கருடன். தற்போது 'பிராமினி கைட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பௌத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம். பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு என்பதால். பல நாட்டுக் கொடிகளில் கருட உருவம் காணப்படுகிறது. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது. இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளின் தேசிய சின்னமாக கருடன் உள்ளது. இந்தோனேசியா நாட்டின் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயர் கருடா.
தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். அதனால் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தில் நமக்குப் பிடிதத்தை தேர்வு செய்து பாராயணம் செய்து வழிபட்டால், அல்லது கருட பகவானுக்கு மலர் சாத்தி எளிமையாக வழிபட்டு நம் சுமையை குறைத்துக் கொள்வோம். அவர் அருளால் வெற்றி கொள்வோம் நம் எதிரிகளை!
கிருஷ்ண கிருஷ்ணா
https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.135796/
Comments